பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆனைநெருஞ்சில் Pedalium murex L;Pedaliaceae


                       ஆனைநெருஞ்சில்                                       Pedalium murex L;Pedaliaceae                                  

மாற்றுப்பெயர் ;  காமரசி ,கோகண்டம்,திருதண்டம்                                          வளரியல்பு ;   சிறுசெடி                                                                     இலைஅமைப்பு ;  சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலை
பூ,காய் ;  தனித்த மஞ்சள்நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக்                காய்களையும் உடையது.                                          மருத்துவ பாகம் ; இலை, தண்டு, விதை
குணம் ;    சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல்,                காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல்                       செய்கை ; அந்தர்ஸ்நிக்தகாரி,மூத்திரவர்தினி,காமவிர்தினி,பலகாரி,தாதுக்ஷீணரோதி, ரக்தஸ்தம்பனகாரி                                                                  தீர்க்கும் நோய்கள்       
    மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந்தானொழிக்குந்
    தேகத்திற் கல்லடைப்பைத்தீர்க்குங்கா – ணாகத்தாந்
    தேனையாரும் பாகைத்திருத்துங் கிளிமொழியே
    யானை நெருஞ்சி லது
யானை நெருஞ்சி லதுசீ தளமாகும்
மானே யெலும்புருக்கி மாற்றுங்காண் – மேனிதனி
லுள்ள வெரிச்ச லுழலையுட் டாகமொடு
தள்ளுபித்த மும்போக்குந் தான் 
  () குளிர்ச்சியுடைய யானைநெருஞ்சில் வெள்ளை,வீழல்,வெண்குஷ்டரோகம், அஸ்மரி, அஸ்திசிராவரோகம்,தேகஎரிவு,உழலை,தாகம்,பித்தமயக்கம் ஆகியவற்றைப் போக்கும் என்க 
                   
      நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரிச்சரத்தை
      வல்ல சுரமனலை மாற்றுங்காண் – மெல்லியலே
      மாநிலத்திற் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
      கூனுறுமெய் வாதமும் போக்கும்.
மேகவெட்டை நீர்ச்சுருக்கு வீறுதிரிதோஷம்புண்
வேகசுர தாகவெப்பை விட்டோட்டும் – பாகந்
தருஞ்ன் மதலைமொழித் தையலேநல்ல
நெருஞ்சிலதனை நினை
 ()நல்ல நெருஞ்சில் சொட்டு மூத்திரம்,சுரவெப்பம், அஸ்மரிரோகம்,நீரடைப்பு,முடவாதம்,பிரமேக வெள்ளை,மூத்திரகிரிச்சரம்,திரிதோஷ கோபம்,விறணம்,சுரதாகம்,உஷ்ணம் நீக்கும்.                                            வகைகள் -: சிறு நெருஞ்சில், பெருநெருஞ்சில்.சிறு நெருஞ்சிலை செப்பு நெருஞ்சில், செம்மநெருஞ்சில் என்றும் கூறுவார்கள். யானை நெருஞ்சிலையே ஆனைத்திப்பிலி என்றும் சிலர் கூறுவர்.                                                          உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதம் மென்மையானது.அதுபோல் யானையின் மென்மையான பாதங்களில் இது பதிந்து புண்ணாக்கி விடுமாதலால் யானை இதனை கண்டு அஞ்சும். எனவே யானை வணங்கி என பெயர் பெற்றது.
 தமிழகம் முழுவதும் மணற்பாங்கான இடங்களில் தானே வளர்கிறது.
1.   ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும், இதனைச் சிறிது சர்க்கரைச்சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை,சொப்பன ஸ்கலிதம் ஆகியவை தீரும்.
2.   மேற்படி சலம் 150மிலி காலை 10 நாட்கள் ப்ருகிவர புதிய வெள்ளை தீரும். நீர்க்கோவைக்குக் கொடுக்க நீர் இறங்கி வீக்கம் வாடும்.
3.   10 கிராம் இலைப்பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகி வர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.
4.   50 கிராம் இலையை மென்மையாய் அரைத்து எருமைத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.
5.   இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
6.   விதையை பொடித்து இளநீரில் கொடுக்க நீர்ச்சுருக்கு தீரும்.பசும் பாலில் கொடுக்க விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.
7.   கொழுந்து இலையை துவரம்பருப்புடன் துவட்டலாகச் செய்து உண்ண நீர் இறங்கும்,நீர்கடுப்பு, வீக்கம் போம்.
8.   நெருஞ்சில் இலையும், வேரையும் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பு குணமாகும்.
9.   நெருஞ்சி விதை சூரணம் 9 பங்கு,வால்மிளகு,சிறுநாகப்பூ,வெடியுப்பு வகைக்கு 3பங்கு பொடித்து கலந்து 500-1000 மிலி கிராம் இளநீரில் கொடுக்க சிறுநீர் தாராளமாகப் போகும்.
10.  நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம்  காய்ச்சாத பாலில் குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தழும்புகளின் மேல் தடவி காலையில் தேய்த்துக் கழுவ சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
11.  நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து,கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்த உடலுக்கு ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.
12.  நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம், கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் அருந்த நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்கள் தீரும்.
13.  சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊறல் தீரும்.
14.  நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்குமப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பணியிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.
15.  சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.
16.  பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாலுளுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து,ஒரு கிலோ பசு நெய்யில் வடையாகத்தட்டி போட்டு எடுக்கவும்,  காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணித்து காலை, மாலை 5 மி.லி.மேற்படி நெய்யில் 5 கிராம் சேர்த்து சாப்பிட்டு,வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்க வெண் குட்டம் குணமாகும். நாட்பட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும்.
17.  சிறு நெருஞ்சில் இலைச் சாறு அரை லிட்டர்,கீழாநெல்லி இலை சாறு அரை லிட்டர் ஒன்றாய்க் கலந்து,கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.
18.  நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராக காய்ச்சி 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.



கருத்துகள் இல்லை: